Thursday, August 9, 2012

                                                        ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்கள்

இந்து மதவெறி தலைவிரித்தாடுகிறது.ராமசேனா தலைவர் கொக்கரிக்கிறார்!

மங்களூர், ஜன. 30- மங்களூரில் மகளிர்மீது தாக்குதல் நடத்திய இந்து மதவெறி அமைப்பான ராமசேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் மீது 45 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன என காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 17 ஆம் தேதியன்று அவர் பேசிய பேச்சு தற்போது வெளிவந்துள்ளது. இந்து தரும ஜாக்ருதி சபை கூட்டத்தில் அவர் பேசும்போது மாலேகாவ்ன் சம்பவம் பின்னாலே இந்த நாட்டில் நடக்கவிருக்கும் சம்பவங்களுக்கான முன்னோடி எனவும், இந்துக்கள் ராணுவ அவதாரம் எடுத்திட வேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் பேசியிருக்கிறார்.

மாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதியில் ஈடுபட்ட சாத்வி பிரக்யாசிங் தாக்கூரின் செயலைப் பாராட்டிப் பேசியதுடன், அவர் போல பல பிரக்யாசிங்குகள் ஒவ்வொரு இந்து வீட்டிலும் தோன்றப் போகிறார்கள் என்றும் வெறித்தனமாகப் பேசியிருக்கிறார்.

ஒவ்வொரு தாய்மாரும் சமையல் கருவிகளுக்குப் பதில் வெடிகுண்டுகளை ஏந்தினால், என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று அவர் குறிப்பிட்டபோது, கூட்டத்தினர் அரகர மகாதேவா என்று கூச்சல் போட்டனராம்.

இவ்வாறு பேசுவதற்கு நான் ஏன் பயப்படவேண்டும்? எனக் கேட்டு மதவெறித்தூண்டுதல் பேச்சை நிகழ்த்தியிருக்கிறார்.

ராமசேனாவின் துணை அமைப்பான இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பு தர்ம சக்தி சேனா என்ற அமைப்புக்கு இளைஞர்களைச் சேர்த்து வருகிறது. இதற்கான கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு அவற்றில் பல்வேறு கொலைக் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன எனும் செய்தி இவர்களின் நோக்கம், செயல் ஆகியவற்றைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் தெரிவிக்கிறது.

துணித்திரைகளால் சுற்றிலும் மறைக்கப்பட்ட இடத்தில் கமுக்கக் கூட்டம் நடந்துள்ளது.

இதில் பா.ஜ.க. உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் யோகிஷ் பட், பெஜாவர் மடத்தலைவர் உடுப்பி விஸ்வேஷ தீர்த்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதேபோன்ற ஒரு கூட்டத்தை ஜனவரி 11 இல் கூட நடத்தியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்கள் வெளிப்படையாகச் சல்லடம் கட்டிவிட்டனர்!

No comments:

Post a Comment